Friday, December 15, 2017

திங்கட்கிழமை

நெரிசலான நூறடி சாலையில் கட்டப்பட்டிருந்த அந்த இருபது மாடி அடுக்கு மாடிக்குடியிருப்பில் தோராயமாக நடுப்பகுதியில் லேசாக தீப்பற்றி மெதுவாகப் பரவிக்கொண்டிருந்தது. கட்டிடத்தை சுற்றி ஒரு பரபரப்பு தொற்றியிருந்தது.

எட்டாவது மாடியில் மோகன் தனது அபார்ட்மெண்டிலிருந்து வெளியே வர எத்தனித்துக்கொண்டிருந்தான். தீயணைப்பு வண்டியின் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தது. தூங்கிக்கொண்டிருந்த  எட்டு மாத இளையமகனை கையில் ஏந்தியபடி ஹாலை அடைந்தவன் வீட்டுக்குள்ளே இருந்த தன்  மனைவியிடம், "ஷைலு அப்பவே எந்திருச்சுட்டாளே.. இன்னும் என்ன பண்ணிட்டிருக்கீங்க.. வாசல் கதவுல தீ பரவ ஆரம்பிருச்சுருச்சு" என்று கத்தினான்.
மனைவி, "பாத்ரூம்  லாக்கை இவளுக்கு திறக்க தெரியலங்க .. வெளில இருந்து என்னாலயும் திறக்க முடியல..எனக்கு பயமாயிருக்கு ", என்று பதறினாள்.
மோகன், "ஓஹ் மை காட்....", என்று அலறியபடி பாத்ரூம் நோக்கி ஓடினான்.
ஷைலு, "அப்பா...அப்பா...", என்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள். நூறு முறை திறந்து பழகிய லாக்கை இன்று பயத்தில் அவளுக்குத்  திறக்கத் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட இளையமகன் என்ன நடக்கிறதென்று புரியாமல் இப்போது அழத்தொடங்களினான்.  "இதோ அப்பா வந்துட்டேன்டா...", என்று சொல்லிக்கொண்டே கைக்குழந்தையை மனைவி கையில் கொடுத்துவிட்டு பாத்ரூம் கதவை காலால் பலம்கொண்டமட்டும் உதைத்தான்.  அது திறப்பதாய் இல்லை. ஒரு வினாடி, "பில்டர்ஸ் நல்லாத்தான் கட்டிக்கொடுத்திருக்கான்", என்ற எண்ணக்கீற்று தோன்றி மறைந்தது. திடீரென தீயணைப்பு வண்டி சத்தம் நின்றிருந்தது.  தீயணைப்பு வண்டி அவனுடைய கடைசி நம்பிக்கை. சத்தம் நின்றது அவனுக்கு உச்சபட்ச அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிர்ச்சியில் அனிச்சையாக, "வண்டி எங்க போச்சு?", என்று கத்தினான். தன்னை மீறி வார்த்தை வெளிவந்தது அப்போது தான் புரிந்தது.
திரும்பிப்பார்த்தான் பக்கத்தில் மனைவி தூங்கிக்கொண்டிருந்தாள், "சே.. கனவா.. நல்லவேளை", என மெலிதாக உச்சரித்ததான்.
அருகில் இருந்த அலாரம் கிளாக்கைப்பார்த்தான். 5:40, திங்கட்கிழமை என்று தன் அசிங்கமான முகத்தை காட்டியது. கனவில் வந்த தீயணைப்பு வண்டிக்கு பத்து நிமிடம் மணி அடித்தது இந்த அலாரம் கிளாக் தான் என்று புரிந்தது ! ஆபீஸ் மீட்டிங், ப்ராஜெக்ட் டெட் லைன், கஸ்டமர் போன் கால் என வரிசையாக எண்ண அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாய் மேலெழுந்து அவனுக்கு சோர்வை உண்டாக்கின. திங்கட்கிழமை மிரட்டியது. கண்களை மெதுவாக மூடினான், "அந்த கனவே உண்மையாயிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்", என்று யோசித்தபடி.

1 comment:

  1. யதார்த்தமான வசனங்கள். திங்கள்கிழமை என்றாலே பலருக்கும் சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறது இக்கதை.

    ReplyDelete