Friday, December 15, 2017

"அது" ---- ஓர் ஆவிக்கதை...!


இரவு மணி 10. ஜெய்பால் பேய்நூறு கிராமத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது அந்த சுடுகாடு இடைப்பட்டது. அந்த ஆள் அரவமில்லாத பகுதியை கடந்து செல்ல 20 நிமிடம் ஆகலாம். ஒரு நிமிடம் தயங்கிநின்றான், சுற்றும் முற்றும் பார்த்தான். பயத்தால் அல்ல. பேச்சுதுணைக்கு யாரேனும் கிடைத்தால் பயணம் சுலபமாகுமென்று தான். அவன் நினைத்தது போலவே..இல்லை இல்லை.. அதற்கும் மேல, மிக அழகான ஒரு பெண் தென்பட்டாள். பளீரென ஆடை, தெளிவான முகம், மெலிதான கொழுசு, பெரிய கண்கள், கரிய நீண்ட கூந்தல்  சகிதமாக குனிந்த தலை நிமிராமல் வந்து கொண்டிருந்தாள்.

அருகில் வந்ததும் அவளை நிறுத்தி, "மன்னிக்கணும், நீங்களும் பேய்நூறு தானே போறீங்க?" என்று கேட்டான்.

அவன் கண்களை ஊடுருவிப்பார்த்து "ஆமாம்", என்றாள் தயங்கியபடி மெல்லிய குரலில்.

"நீங்க தப்ப நினைக்கலேனா நாம ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேச்சு துணையா பேசிட்டே போகலாமே..", அவன்.

"நான் கூட இந்த இடத்தை தனியா எப்படி கடக்குறதுன்னு பயந்துகிட்டேதான் வந்தேன்..நல்ல வேலையா உங்கள பாத்தேன்..", அவள்.

பயந்துகிட்டேதான் வந்தேன் என்று அவள் சொன்னாலும் கூட, அவளைப்பார்த்தால் பயந்தவளாக தோன்றவில்லை. நடக்க ஆரம்பித்தார்கள்.

"எப்படி நீங்க இந்த நேரத்துல...? தனியா ?", அவன்.

சிறிது யோசித்து விட்டு அவள், "நான் வழக்கமா வர்ற பேருந்து..இடையில் பழுதானதால் ஒரு மணிநேரம் தாமதம்..அதான்", என்றாள்.

"ஓஹோ..", அவன்.

பேசிக்கொண்டே சென்றார்கள். ஜெய்பால் வெகு நாகரிகமாக நடந்து கொண்டான். கண்ணியமாக பேசினான். அவளுக்கும் அவனுக்கும் சற்று இடைவெளி விட்டே நடந்தான். இருபது நிமிடத்தில் "பேய்நூறு உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பலகை தெரிந்தது.

இடம், வலமாக இரண்டு சாலைகள் தென்பட்டன..

"நீங்க எந்த பாதையில் போகணும்?", அவள்.

"நான் வலது பாதைங்க.. நீங்க?", அவன்.

"நான் இடது பாதை", அவள்.

விடை பெற்றுக்கொண்டு அவள் தன் பாதையில் செல்லளானாள்.

பத்து பதினைந்து அடி சென்ற ஜெய்பால் அவள் போன பாதையைத் திரும்பிப் பார்த்தான். அவள் கண்களிலிருந்து மறைந்திருந்தாள். அதற்குள் எப்படி அந்த சாலை திருப்பத்தை அடைந்திருக்க முடியும் என்று துணுக்குற்றான். ஆயினும் தன பாதையில் நடக்கலானான்.

"ச்சே.. நீங்க எந்த பாதையில போறீங்கன்னு நாம முதல்ல கேட்டுருந்தா அவள் சொல்றதையே நாமும் சொல்லியிருக்கலாம்.
கூட 10 நிமிடமாவது அவளோடு பேசிட்டிருந்திருக்கலாம்.  நமக்கென்ன வேலையா..வெட்டியா. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டோமே.. உயிர் போய்ட்டா இப்படித்தான் புத்தி மந்தமாகிடும் போல.." என்று வருத்தப்பட்டுக்கொண்டது "அது" !

No comments:

Post a Comment