Friday, December 15, 2017

புதிரான அழைப்பு

வெளியே கிளம்ப பைக் சாவியைத் தேடிக்கொண்டிருந்த கிரிஷாந்தை அவன் மொபைல் போன் கூப்பிட்டது. எடுத்துப்பார்த்தான். "அப்பா காலிங்..", என்று மொபைல் போன் திரை மிரட்டியது. சில வினாடிகள் திகைத்து செய்வதறியாது நின்றவனை கிச்செனிலிருந்து அம்மாவின் குரல் கலைத்தது. "அங்க என்னடா மொபைலை நோண்டிட்டு இருக்க.. உங்க அப்பாவுக்கு நாளைமறுநாள் ரெண்டாவது வருஷ திதி. ஹோட்டல்ல சாப்பாட்டுக்குச் சொல்லுன்னு நாலு நாளா கத்திட்டு இருக்கேன்.. கொஞ்சமாவது காதுல வாங்குறியா நீ ?"

அதற்குள் போனும் சத்தத்தை தானாகவே நிறுத்தியிருந்தது.  அம்மாவின் குரல் கேட்டோ என்னவோ ?!

குரலில் இலேசான நடுக்கத்துடன், "அ..அ..அங்கதாம்மா கிளம்பிட்டு இருக்கேன்..", என்று ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த பொய்யை பதிலாக கொடுத்தான். அம்மாவிடம் போன் விஷயத்தைப்பற்றி உடனே பேச வேண்டாம் என நினைத்துக்கொண்டான். இன்னமும் அவன் முகம் வெளிறியே இருந்தது. பிரிஜ்ஜை திறந்து சிறிது குளிர்ந்த தண்ணீர் குடித்தான். இவ்வளவு தேடியும் பைக் சாவி இன்று ஏனோ கிடைக்கவில்லை. கிரிக்கெட் பேட் இருந்த உரையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு பைக்கை அடைந்தான். பைக்கின் தலைப்பகுதியில் உள்ள சில வயர்களை இணைத்துப் பிறகு கை கட்டைவிரலால் இரண்டு மூன்று தடவை பைக் ஹாண்டில் பாரில் இருந்த "ஆட்டோ ஸ்டார்ட்" பட்டனை அழுத்தியும் பைக் தேமே என்று இருந்தது. எரிச்சலோடு ஸ்டார்ட்டரை மிதித்தான். நான்கைந்து மிதிகளுக்குப்பிறகு உயிர் மேல் இருந்த ஆசையால் பைக் விழித்துக்கொண்டது. பைக்கில் போகும்போது, "அப்பா காலிங்.." என்று மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவனுக்குத்தெரியாது பைக்கில் பிரேக் வயர் அறுந்து போயிருந்தது.

குறிப்பு:
பைக் சாவி கிடைக்காதது, பைக் ஸ்டார்ட் ஆகாதது மற்றும் அவனுக்கு வந்த புதிரான போன் கால் என அத்தனை அமானுஷ்ய சமிக்ஞைகளையும் கிரிஷாந்த் கவனிக்கத்தவறிவிட்டான். கவனித்திருந்தால் அவனும் இன்று நம்மோடு சேர்ந்து இந்த கதையைப் படித்துக்கொண்டிருப்பான். 

No comments:

Post a Comment