Friday, December 15, 2017

திரிஷா இல்லேனா நயன்தாரா...

 சுள்ளென்று வெயில் முகத்தை சுட, கா..வி..யா.. என்று மனதுக்குள் அவள் பெயர் ஓட, தொடர்ந்து அவள் முகம் அவன் மூளையில் மின்னி மறைய, ஒரு கண் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான், சுதர்சன், 23 வயது, கணிப்பொறி பொறியாளர்.
மணி 4:43 என்றது. அது தற்போதய நேரமல்ல, பேட்டரி தன் கடைசி மூச்சைவிட்ட நேரம் என்று புரிய அவனுக்கு சில நொடிகளே தேவைப்பட்டன. கூட கொஞ்ச நேரம் உயிர் வாழ்ந்து 7 மணிக்கு தன்னை எழுப்பிருக்கலாம் என்று கடிகாரத்தை நொந்துகொண்டே அவசரமாக எழுந்தான். அடுத்த 14 வது நிமிடத்தில் தன் பைக்கில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தான். இன்று டீம் மீட்டிங் 9 மணிக்கு. எப்படியும் நேரத்துக்கு போகப்போவதில்லை. ஏற்கனவே மேனேஜரிடம் சுமூகமான உறவில்லை, எப்படியெல்லாம் தனெக்கென்று நிகழ்கிறது என்று தன்னைத்தானே கொண்டான். குறுஞ்சாலை கடந்து அண்ணா சாலையைத் தொட்ட சில நொடிகளில் பசும்பொன் தேவர் சாலையில் உள்ள சந்திப்பில் சிவப்பு சமிக்ஞை அவனை வரவேற்றது. பச்சை சமிக்ஞை கிடைக்க குறைந்தது 8-12 நிமிடம் தவம் கிடக்க வேண்டும். ஊருக்கு தொலைபேசி 10 நாட்கள் ஆகிவிட்ட நினைப்பு, அலுவலகம் பற்றிய சிந்தனை, என்றைக்காவது இந்த இடத்தை நிற்காமல் கடந்ததுண்டா என்ற எரிச்சல் என பல விஷயங்கள் மனதில் ஒரு ஓட்டம் ஓடி மறுபடியும் காவியா-விடம் வந்து நிலைத்தது. காவியா அதே தொழில் நுட்ப பூங்காவில் மற்றொரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவள், நல்ல சிநேகிதி. ஒன்னரை வருடம் பழகிய பிறகு 2 நாட்களுக்கு முன்பு தான் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தான். காவியாவுக்கு பெரிதாக அதிர்ச்சியில்லை; அவளும் எதிர்பார்த்திருக்ககூடும். இரண்டு நாள் அவகாசம் கேட்டுக்கொண்டாள். அலுவலகத்தில் இருந்து விடுப்பும் எடுத்துக்கொண்டாள். அவளுக்கு இவனைப்போலவே சுந்தர் என்று இன்னொரு நண்பன் உண்டு. அவனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறாள். அவள் கேட்டுக்கொண்ட 2 நாள் அவகாசம் இந்த இருவரில் ஒருவனை தேர்வு செய்யவே என்பதை சுதர்சன் ஒருவாறாக யூகித்துக்கொண்டான். பச்சை சமிக்ஞை விழ, தன் பைக்கை விரட்டினான். ஓரிரு நிமிடம் தான் போயிருப்பான், போக்குவரத்துக் காவலர் ஒருவர் நிறுத்தி ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை சோதனையிட ஆரம்பித்தார். என்ன சோதனை இன்று.. காலை முதலே எதுவுமே சரியில்லையே என்று தன்னையே நொந்துகொண்டான். காவலரிடம் கையிலிருந்த ரூ.200யும் அழுதுவிட்டு அலுவலகம் அடைந்தான். மணி 9.45. மேனஜேரிடம் திட்டு, கையில் ஒரு பைசா இல்லாமல் மதிய சாப்பாட்டிற்கு நண்பனிடம் கடன், நினைத்த வேலையே முடிக்க முடியாமல் மாலை வரை போராடி தலை வலி, மாலை 7 மணிக்கு இன்னொரு மீட்டிங், கஸ்டமரிடம் இருந்து வந்த போன், காவியாவிடமிருந்து வராத போன் என்று அந்த நெடிய கொடிய நாள் முடியாமல் இவனைப்படுத்தியது. ஒரு வழியாக 9 மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிடாமலே படுக்கையில் சரிந்தான். அடிக்கடி கைபேசியை எடுத்துப்பார்த்துக்கொண்டான். இந்த மாதிரி ஒரு துரதிஷ்டமான நாளை தான் கண்டதுண்டா என்று யோசித்துப்பார்த்தான். துவண்டு போயிருந்தான். ஒரு வேளை காவியா தன்னை "நோ" சொல்லிவிடுவாளோ என்ற சிந்தனை அவனை வாட்டியது. ஒரு நொடி அவளை தொலைபேசியில் கூப்பிடலாமா என்று கூட நினைத்தான். பிறகு கண்களை மூடி சில நிமிடம் சும்மா இருந்தான். கைபேசியில் குறுஞ்செய்தி சிணுங்கியது. ஆர்வமாக எடுத்தான். "i love you" என்று வந்திருந்தது. காற்றில் குதித்தான். ஆழமான மூச்சு ஒன்று சுதந்திரமாக வெளியேறியது. உடனடியாக அவள் எண்ணை அழைத்தான்.மறு முனையில் பெண் குரல், "உங்கள் கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் ....". வந்த கோபத்தில் கைபேசியை தூரவிட்டெறிந்தான். இரண்டு அல்லது மூன்று பாகங்களாக சிதறியது. காவியாவின் குறுஞ்செய்திக்குப்பிறகும் துரதிஷ்டம் இன்று இன்னும் தொடர்கிறது என்பதை இவனால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. தரைவழி  தொலைபேசியை அணுகினான்.
மின்னல் வேகத்தில் காவியாவின் எண்ணை அழுத்தி ஹலோ சொல்ல, எதிர்முனையில் உற்சாகமான குரலில் அவள், "சுந்தர் !!??" என்று சொல்ல. "Sorry, wrong number " என்று சொல்லிவிட்டு தொலைபேசியை கீழே வைத்தான். சுந்தர்க்கு அனுப்ப வேண்டிய "i love you"வை தவறுதலாக பெயரொற்றுமையால் தனக்கு அனுப்பிவிட்டாள் என்று புரிந்துகொண்டான். செய்வதறியாது சில நிமிடம் நின்று கொண்டிருந்தான். இலக்கில்லாமல் சுவரை வெறித்துப்பார்த்தான். இதற்கு மேல் இன்று வேறு ஏதும் நடக்ககூடதென்றால் தூங்குவது ஒன்றே ஒரே வழி என்று விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சரிந்தான். அடுத்த சில நிமிடங்களில் மின் வெட்டு ஏற்பட்டு விசிறி ஓடுவதை நிறுத்த, சென்னையின் தகிக்கும் வெப்பம் அக்கினி நாக்கை நீட்டியது. வெப்பத்தை இவன் உணராத போதும், உடம்பிலிருந்து வியர்வை வெளியேறவே செய்தது.  வியர்வையும், கண்ணீரும் தலையணை நினைத்தன. இவ்வளவையும் தாண்டி அசதியால் அடுத்த 40-50 நிமிடங்களில் தூங்கிப்போனான். அன்றைய மோசமான நாளும் அவனிடமிருந்து வெற்றிகரமாக விடைபெற்றுக்கொண்டது.

பின் இணைப்பு: (கதையை எதிர்மறையாய் முடிக்க விருப்பமில்லாததால், இந்த பின் இணைப்பு...)

காலை மங்கலான வெளிச்சத்தில் சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தான். ஆறு காட்டியது. பாண்ட்-ஷர்ட் சகிதமாக தூங்கியிருந்தான். நேற்றைய நினைவுகளை அசை போடாமல், அலுவலகம் புறப்படலானான். பளிச்சென்று உடை அணிந்தான். சிதறியடித்த கைபேசியை தேடினான். தேடும் போதே இந்த மாதம் புது கைபேசிக்கு ரூ.10,000 செலவு பண்ண வேண்டியிருக்குமோ என்ற எண்ணம் பயமுறுத்தியது. 3 பாகங்களை இணைத்து உயிர்ப்பிக்க ஆச்சர்யமாக வேலை செய்தது கைபேசி. சின்னதாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு ரீச்சார்ஜ் செய்து கொண்டான். பைக்கை உதைத்து அதன் தூக்கம் கலைத்தான். அலுவலகம் பயணித்தான். 2 நிமிடம் சென்றிருப்பான், ஒரு குறுஞ்செய்தி சிணுங்கியது. வண்டியை ஓட்டிக்கொண்டே கைபேசியை எடுத்துப்பார்த்தான். "hi..have a great day" என்றும், அனுப்பியது ரேகா என்றும் தெரிந்தது. ரேகா, காவியாவைப் போல் இன்னொரு சிநேகிதி. 3 மாதங்களுக்கு முன் ஒரு சின்ன வாக்குவாதத்தில் பேசுவதை நிறுத்திக்கொண்டவள்.. பல குறுஞ்செய்தி அனுப்பியும் மௌனத்தையே பதிலாகத் தந்தவள். இன்று திடீரென்று "hi..have a great day". பதிலுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதா வேண்டாமா..? அனுப்புவதென்றால் எப்போது அனுப்புவது..? ஒரு வேளை இவளும் வேறு யாருக்கோ அனுப்பவேண்டியத்தை தனக்கு அனுப்பிவிட்டாளோ? என பல கேள்விகள் முளைத்தன. அவர்கள் நட்பு, அதை தொடர்ந்து வந்த வாக்குவாதம் போன்ற எண்ணங்களும் மனத்திரையில் வேகமாக ஓடி மறைந்தன.. குறுஞ்சாலை கடந்து அண்ணா சாலையைத் தொட்டான். சில நொடிகளில் பசும்பொன் தேவர் சாலையில் உள்ள சந்திப்பை நெருங்கும் போது வலது கால் அனிச்சையாக பிரேக்கை அழுத்தச்சென்றது. அப்போது தான் கவனித்தான் பச்சை சமிக்ஞை அவனை வரவேற்பதை. இவன் கண்களை இவனால் நம்ப முடியவில்லை. இந்த வழியில் தான் இரண்டு வருடங்களாக போகிறான். நினைவில் உள்ளவரை இந்த இடத்தில் பச்சை கிடைத்ததில்லை. இன்று ஒரு அதிசய நாள் தான்... "Yes, this must be a great day", என்று எண்ணிக்கொண்டான். அலுவலகம் சென்றதும் ரேகாவுக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் என்று நினைத்துக்கொண்டு பைக்கை இன்னும் வேகமாக விரட்டினான்.

No comments:

Post a Comment